அதாவது, 2012இல் வாசித்தவை, 2013இல் வாங்கியவை. ‘வாசித்தவைகள்’ ஏற்கனவே உள்ளிட்டிருக்கும் பட்டியல் (2012 புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்) சேர்த்து, என்னுடன் சமீப வருடங்களில் புழங்கும் புத்தகங்கள். ‘வாங்கியவை’, நேற்று (சனவரி 12) 2013 புத்தகக் காட்சியில் வாங்கியவை. புத்தகக் காட்சி நடந்துகொண்டிருப்பதால், உங்களுக்கு உபயோகமாகலாம் என்று இச்சமயத்தில், ஓரிரு குறிப்புகளுடன் இவற்றை பட்டியலிட முனைந்தேன். உண்மை வேண்டுமெனில், இவ்வகையில் ‘பட்டியல்கள்’ எழுதுவது மிக எளிது; அதற்கேற்றபடி ‘தன்னிலை விளக்கம்’ கொடுக்கத் தெரிந்திருக்கவேண்டும். அவ்வளவே.
தன்னிலை விளக்கம்: இங்கும் மேலுள்ள சுட்டியில் பட்டியலிட்டுள்ளதுமான அனைத்து புத்தகங்களுமே என்னால் சில நேரங்களில் ரசிக்கமுடிந்தவைகளே. சிலபகுதிகளிலாவது, என்னை யோசிக்கவைத்தவையே, வைப்பவையே. நேற்று வாங்கிய, இனி வாசிக்கப்போவதும், அவ்வகையில் நிச்சயம் இருக்கும். தேர்வு என்று தரம் பிரிப்பது கடினம்; அது விமர்சகர்கள் வேலை. நான் வெறும் வாசகன். விமர்சகர்கள் பரிந்துரைகளை முழுவதுமாய் நம்பாத, நேரடியாக எனக்குப் புதியதாய் கிடைக்கும் எழுத்திற்கு காசுகொடுக்கத் தயாராய் உள்ளவன். எதையும் வாசிப்பேன்.
சாய்வு (சாய்சு) என்றால், கதைகளைவிட கட்டுரைகளையே விரும்புவேன். நாவல்கள் பெரிதாக இருக்கவேண்டும். சிறுகதைகள், ஒரே எழுத்தாளரின் தொகுப்புகளாய். எவ்விதமான நகைச்சுவையும், எவ்விதமான ‘இலக்கிய அந்தஸ்து பெற்ற’ அவலச்சித்திரிப்பையும் விட உகந்தவையே. அதேபோல, எவ்விதச் சித்திரிப்புகளிலும், அனுபவப் பகிர்வுகளிலும், எழுத்தின் சுயகௌரவம் முக்கியம் என்று கருதுவேன். இது மிகவும் அகவயமான மதிப்பீடே என்றால், கெட்டி அட்டைப் புத்தகங்கள், உள்ளடக்கமும் நன்றாக இருக்கும் என்று கருதுவேன், என்பதையும் தெரிந்துகொண்டுவிடுங்கள்.
இப்போது புத்தகங்கள்.

“ஸொகஸுகா ம்ருதங்க தாளமு” என்று தொடங்குகிறார் தன் ஸ்ரீரஞ்சனி ராக கீர்த்தனையை, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகைய்யர். இதே கருத்தை அவருக்குமுன்னர் புரந்தரதாஸரும் “தாள பேக்கு தக்க மேள பேக்கு” என்று முன்மொழிந்தார். நம் மரபிசை கச்சேரிகளில் சங்கீதத்திற்கு உறுதுணையாய் இருக்கவேண்டிய தாளபக்கவாத்தியங்களில் முதன்மையானது மிருதங்கம்.
இணையமும் அதில் வலைப்பூக்களும் பூத்துக்குலுங்கும் காலத்திற்கு முந்தைய ஒரு பிராயத்தில் புத்தக புழுவில்லையாகினும், பூச்சியாயிருந்தேன். படித்த புத்தகங்களை ஒரு குயர் கோடுபோட்ட நோட்புக்கில் பட்டியலிட்டேன். பத்து வருடமாக பட்டியலிட்டதில், என்னிடம் உள்ள புத்தகங்கள் என்றில்லாமல், அக்கம்பக்கத்தில் ஓசியில் படித்தவை என சுமார் ஐநூறு புத்தகங்கள் தேறியது. புனைவு, வினவு, அறிவியல், அவியல், என பலசரக்கு தலைப்புகள் பட்டியலில் அடக்கம். எதற்கு இந்த சுய விளம்பரப் பட்டியல் என்று தெரியவில்லை; கேர்ள்பிரண்ட்ஸ்களிடம்கூட காட்ட எத்தனித்ததில்லை. டூ விட்டுவிடுவார்களோ என்று பயம்.
சற்று தீவிர சண்டமாருத வாத்தியார் பக்தர்களோ இருதயம் பலஹீனமானவர்களோ இதற்குமேல் இதை படிக்கவேண்டாம். வாத்தியார் என்றால் சுஜாதாவா என்று டவுட் கேட்பவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். மற்றபடி கேளிக்கை இலக்கியங்களைப் பற்றி தமிழாங்கில மொழிச்சிதைவுகளினால் அனுபவக்கருத்துப்பரிமாறமுனையும் ஜாலி கட்டுரையே. பொதுஜன வாசிப்பிற்கு உகந்தது.